Saturday, September 18, 2010

என்ன தான் நடக்கிறது




"கிராமத்தில் எங்களிடம் இருந்து வாங்குவதோ ஒரு கிலோ 35 ரூபாய்; சென்னையில் விற்பதோ ஒரு கிலோ 120 ரூபாய். என்ன தான் நடக்கிறது... என்றபடி, சென்னை உழைப்பாளர் சிலை அருகே, ராமநாதபுரத்தை சேர்ந்த லாரன்ஸ் என்ற விவசாயி, ஒரு மூட்டை மிளகாய் வத்தலுடன், தனிநபராக, உண்ணாவிரதம் இருந்தார். "வெயிலிலும், மழையிலும் காய்ந்து உருகி வேலை பார்க்கும் எங்களுக்கு, குறைந்த ஊதியம், பதுக்கி வைத்து விற்பவர்களுக்கு லாபமா? என்றபடி போராட்டத்தில் குதித்து விட்டார்.

Sunday, September 12, 2010

வீழ்ச்சியின் பிடியில் வேளாண்மை

Article by Mr. கோ.லட்சுமி நாராயணன்

"இந்த ஆண்டு சர்க்கரை மற்றும் அரிசி போதுமான விளைச்சல் இல்லை; இதனால் உணவுப் பற்றாக்குறை வரும். பருவநிலை மாற்றம் காரணமாக மழை பெய்யும் காலம் மாறிப் போய் விட்டது' என, விவசாய அமைச்சர் சரத்பவார் கூறுகிறார். இந்நிலைமையை சமாளிக்க, தாய்லாந்து, சீனா மற்றும் பாகிஸ்தானிருந்தும் கூட லட்சக்கணக்கான டன் அரிசி, சர்க்கரை இறக்குமதி செய்யப்படுமென்று, உணவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது; உண்மை நிலை அதுவல்ல.

ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வந்த விவசாயிகள், விவசாயம் செய்வதில் போதிய வருமானம், லாபம் இல்லாமல், இத்தொழிலை விட்டு விட்டனர் அல்லது குறைத்து கொண்டனர். சிலர் வறுமையிலும், பலர் நஷ்டத்திலும் தோய்ந்து துவண்டு விட்டனர். லட்சக்கணக்கான டன் அரிசி, கோதுமை, சர்க்கரை இறக்குமதிக்கு செலவாகும் கோடிக்கணக்கான ரூபாயை, விவசாய நலனுக்கு செலவிட்டாலே போதும். விவசாயி ஊக்கம் பெற்று, உற்பத்தி பெருகும் நிலை உருவாகும். தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகி விட்டது. மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளால், சர்க்கரை கிலோ 12.50 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது நடந்து ஆறு, ஏழு மாதங்களில் சர்க்கரை கிலோ 36 ரூபாய்க்கு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது வேடிக்கையாக உள்ளது. இதில், அரசியல்வாதிகளின் ஊழல்களும் அடக்கம்.

கடந்த ஆண்டுகளில், நம் நாட்டின் சர்க்கரை ஆலைகளின் லாபம் 30 கோடியிலிருந்து, 901 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால், ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிக்கு தொடர்ந்து நஷ்டம். எனவே, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு தகுந்த ஆதார விலையை அரசு அளிக்க வேண்டும். அதே சமயம் நுகர்வோர் வாங்கும் வகையில், விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல், இடைத்தரகர்களை குறைத்து அல்லது நீக்கி, அரசு செயல்பட வேண்டும். மேற்கண்ட இரு வழிகளையும் அரசு முக்கியத்துவம் கொடுத்து ஆராய வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டி தயாரிக்கும் நிறுவனம், அவர்களே விலை நிர்ணயிக்கின்றனர். தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனம், தான் தயாரித்த அப்பெட்டிக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்கின்றனர். தங்கத்திற்கு தங்க நகை வியாபாரிகளே, தங்கம் சார்ந்த தொழில் செய்பவர்களே விலை நிர்ணயிக்கின்றனர். ஆனால், விவசாய நாடு என்று கூறிக் கொள்ளும் அரசு தான், நெல்லுக்கும், கோதுமைக்கும், கரும்புக்கும் விலை நிர்ணயம் செய்கிறது. குளிர்சாதன அறையில் உட்கார்ந்து, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் விவசாயப் பொருளுக்கு கட்டுப்படியாகாத விலையை நிர்ணயம் செய்கின்றனர். உண்மையான விவசாயியை கலந்தாலோசிப்பதில்லை. விலை நிர்ணயத்தில், விவசாயியின் பங்கு அறவே இல்லை. உற்பத்தி செய்தவனுக்கு விலை கூற வழியில்லை. இப்படிப்பட்ட அரசின் அணுகுமுறையால், விவசாயம் பாதிப்படைந்து பல விவசாயிகள், நிலத்தை விற்று நகரத்திற்கு சென்று விட்டனர். பலர் பணப்பயிர் விவசாயத்துக்கு மாறி விட்டனர். மேலும் பலர், நிலத்தை ப்ளாட் போட்டு விற்று விட்டனர்.

விவசாய நிலப்பரப்பு குறைந்து விட்டது. விவசாயத்தில் லாபம் இல்லாததால் தான், கிராமவாசிகள் நகரத்திற்கு சென்று, நகரத்தில் ஜன நெருக்கடியை உருவாக்கி விட்டனர். விவசாயத்தில் கூலி வேலை செய்தவர்கள், மற்ற வேலைகளுக்கு சென்று, அதிக கூலி பெறுவதால் விவசாயத் தொழிலுக்கு வேலையாட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அரசின் 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டமும் காரணம். "இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்' என்றார் காந்தி. ஆனால், இந்தியாவில் சரியான திட்டமிடலும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாத தலைவர்களால், விவசாயம் வஞ்சிக்கப்படுகிறது. விவசாயி ஆண்டுக்கு ஆண்டு, கடன் வாங்குகிறார். அரசும் வருடா வருடம் கடன் கொடுத்து, விவசாயியை கடனாளியாகவே வைத்திருக்கிறது. விவசாயி என்று தன்னிறைவு அடைகிறான் என்பது கேள்விக்குறியாகி விட்டது. விவசாயத்தை நலிவடையச் செய்து, விவசாயிகளை விவசாயத் தொழிலாளிகளை நகரத்தை நோக்கி விரட்டியது அரசு தான்.

பட்டுக்கோட்டையார் எழுதிய, "காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்' என்ற பாடல், யதார்த்தத்தை உரைக்கிறது. மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் என பலரும், தங்கள் மகன்களை தங்கள் துறையிலேயே வளர்க்க விரும்புவர். ஆனால், ஒருபோதும் தன் மகனை விவசாயம் செய்ய விவசாயி ஊக்கப்படுத்துவதில்லை. தான் விளைவித்த நெல்லை வண்டியில் ஏற்றி, நான்கைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு கொள்முதல் நிலையத்திற்கு விவசாயி எடுத்துச் சென்றால், உடனே கொள்முதல் செய்வதில்லை. காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.

விவசாயி உற்பத்தி செய்த அந்த நெல் (அன்னலட்சுமி) மூட்டைகள், சாலை ஓரத்தில் அடுக்கப்பட்டு, எப்போது கொள்முதல் செய்வாரோ என்று காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. சில சமயங்களில், இரண்டு அல்லது மூன்று நாள் கூட நெல்லுக்கு பாதுகாப்பாக, அம்மூட்டையின் மீது விவசாயி, உறங்குவதைப் பார்க்கலாம். அறுவடை செய்த நெல்லை தூய்மைப்படுத்த, காய வைக்க சரியான களம் இல்லாததால், நெடுஞ்சாலையில் பஸ் வழித்தடத்தில் நெல்லை சுத்தப்படுத்தவும், காய வைக்கவும் நேரிடுகிறது. இதனால் வாகனங்களும், பயணிகளுக்கும் கூட பல சிரமங்கள் ஏற்படுகின்றன.

ஒருவழியாக நெல் கொள்முதலுக்கு வந்தவுடன், மூட்டையை தராசில் தூக்கி வைத்து எடை போட, அரசால் நியமிக்கப்படும் ஊழியர்கள், தராசில் வைத்தவுடன் தன் இரு கைகளையும் சேர்த்து மூட்டையில் உள்ள நெல்லை எவ்வளவு அள்ள முடியுமோ (மூட்டைக்கு ஒரு முறை மட்டும்) அவ்வளவு தங்களுக்கு எடுத்து கொள்கின்றனர். அது நிச்சயம் ஒரு கிலோவுக்கு குறையாமல் இருக்கும். கொள்முதல் செய்யும் அலுவலரோ, ஒவ்வொரு மூட்டைக்கும் இரண்டு முதல் ஐந்து ரூபாய் வரை, மாமூலாக வசூலித்து விடுவார். கொடுக்க மறுத்தால், "ஈரப்பதம் அதிகம், நெல் தரம் சரியில்லை...' எனக் கூறி, விவசாயியை மிரட்டி வளைத்து விடுவார்.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, பாடுபட்டு உற்பத்தி செய்த விளைப்பொருளை விற்க, லஞ்சம் கொடுக்கும் உற்பத்தியாளரை, விவசாயியை இந்நாட்டில் தான் பார்க்கலாம். பாவம் விவசாயி, அவனுக்கு இந்த அதிகாரி வர்க்க சூழ்ச்சிகளிலிருந்து விடுபட வழி தெரிவதில்லை; வழியும் இல்லை. வி.ஏ.ஓ., தலையாரி ஆகியவர்களை சரிகட்டி, ஆற்றுப் படுக்கையில் மிளகாய் பயிரிடுகிறான் விவசாயி. தன் மனைவி வந்து சட்னிக்கு பச்சை மிளகாய் பறிக்க வந்தால் கூட அதட்டுகிறான். மிளகாய் பழுத்து வற்றல் தயாரான பின், அதை வியாபாரிக்கு, அவர் கூறும் விலைக்கு, அதாவது குறைந்த விலைக்கு விற்கிறான். அந்த மிளகாய் மூட்டை, நகரத்திற்கு செல்கிறது. அங்கு மிளகாய் மூட்டையின் சாக்கு மாற்றப்படுகிறது. பிறகு பல மடங்கு விலை உயர்த்தி, கடைகளுக்கு விற்கப்படுகிறது. இப்போது மிளகாய் உற்பத்தி செய்த விவசாயியே, அதிக விலை கொடுத்து வாங்குகிறான். இதில் அதிக லாபம் அடைந்தவன், விவசாயியும் அல்ல; வாங்கி நுகரும் நாமும் அல்ல. இடையில் சில முதலைகள் ஏப்பமிட்டு விடுகின்றன. விவசாயியின் நிலைமை அந்தோ பரிதாபம்.

இப்படி தொடர்ந்து விவசாயி, பல்முனைத் தாக்குதலால் தாக்கப்படும் போது, தற்கொலை செய்யாமல் வேறு என்ன செய்வான்? "சுழன்றும் ஏர்பின்னது உலகம்; உழுவோன் உலத்தார்க்கு ஆணி' என்று வள்ளுவரும் இன்னும் பலவாறாக உயர்த்தி சொல்கிறார். ஆனால், விவசாயியை அரசு ஒருபுறம், சுயநல அரசியல்வாதிகள் ஒருபுறம், அதிகார வர்க்கம் ஒருபுறம் என, மும்முனைத் தாக்குதலை தொடுக்கின்றனர். இவற்றை எதிர்கொண்டு விவசாயி, தலை நிமிர்ந்து நிற்கும் நாள் எந்நாளோ, அந்நாளே இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெரும் நாளாகும்.

                                                                          - கோ.லட்சுமி நாராயணன், கல்வியாளர்

Saturday, May 1, 2010

கோடிகளைத் தொடரும் கேடிகள்


கொஞ்ச நாளாகவே, பத்திரிகை செய்திகளில் சர்வ சாதாரணமாக கோடிக்கணக்கான ரூபாய் டீலிங்குகள் பற்றி சொல்லப்படுவது, தெருக்கோடியில் சிங்கிள் டீக்கே திண்டாடுகிற பாமரன்களை கொண்ட தேசத்திற்கு அதிர்ச்சி தான்.

முதலில் உத்தரபிரதேச முதல்வர் மாயாவதிக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றி விழா ஆண்டில் போடப்பட்ட, ரூபாய் நோட்டு மாலைகளில் பல கோடி ரூபாய் இருந்ததாகக் கூறப்பட்டது; அதற்கே நமக்கு தலை சுற்றியது. அடுத்தது, ஆந்திராவில், முன்னாள் முதல்வரும், நடிகருமான என்.டி.ராமாராவின், பேரன் நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு திருமண வரதட்சணையாக, 500 கோடி ரூபாய்க்கான சொத்து வழங்கப்படுவதாக வந்த செய்தி. இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் புழங்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை பற்றி தகவல்கள் கசிந்ததும், சராசரி இந்தியன் செய்வதறியாமல் திக்பிரமை பிடித்து நிற்கிறான். எங்கிருந்து வந்தது இத்தனை கோடிகள்? இவை யாருடைய பணம்? இந்த நாடு ஏழை நாடா? சராசரி இந்தியன், வீட்டுக்கு வாடகை தர முடியாமல் தவிப்பதும், தன் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல் திணறுவதும், தன் பெற்றோருக்கு நல்ல மருத்துவ வசதியை செய்து தர முடியாத இயலாமைக்கு வருந்துவதும், தண்ணீரின்றி, மின்சாரமின்றி, கொசுவை அடித்தே, இரவைக் கழித்து விடுவதுமாய் அப்பாவி மக்கள் பழகி விட்டனர். இருந்தாலும், சிலரிடம் மட்டுமே, இத்தனை கோடிகள் எப்படி புழங்குகிறது?

ஐ.பி.எல்., கொச்சி அணியின் பங்குகளை தன்னுடைய காதலி சுனந்தா புஷ்கருக்கு பெற்றுத்தர, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் மீது குற்றம் சாட்டப் பட, அது அவர் பதவியையே பறித்தது. ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி மீதும் குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. அவரது உறவினர்களையே பினாமிகளாக்கி, சில அணிகளை அவர் கைப்பற்றியுள்ளாராம். அதற்காக அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட செல்ல, அதற்கு முன்பே ஒரு இளம் பெண் முக்கிய ஆவணங்களுடன் வெளியேறிவிட்டாராம். அந்த இளம் பெண், சாராய சாம்ராஜ்ய அதிபர் விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகள். ஜேம்ஸ் பாண்ட் படக் காட்சிகள் போல் நடக்கும், இந்த சம்பவங்களை கவனிக்கும் போது, இது ஒரு ஜனநாயக நாடுதானா என்ற சந்தேகம் யாருக்கும் ஏற்படத்தான் செய்யும். தேர்தலுக்கு முன், சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கோடிக்கணக்கான ரூபாயை மீட்டு, சராசரி இந்தியனுக்கு உதவுவதாக கூறிய கட்சிகள், தற்போது நம் தேசத்திலேயே சர்வசாதாரணமாக உலவும் இந்த கோடிகளை பார்த்து, அந்த, 'கேடி'கள் மவுனமாக இருப்பதற்கு என்ன அர்த்தம்?

ஏதோ இருக்கு, என்னமோ நடக்குது, எல்லாருக்கும் கொள்ளையில் பங்கு இருக்கு என்று, இன்று, சாமான்ய இந்தியனுக்குப் புரிகிறது. இருந்தாலும் என்ன... அவன் இந்த நெருப்பு வெயிலில் பருப்பு வாங்க ரேஷன் கடையில் க்யூவில் நின்று கொண்டிருக்கிறான். கிரிக்கெட் ஆட்டமா, சூதாட்டமா? இதற்கு மட்டும் ஏன் இப்படி ஒரு மவுசு அல்லது மவுசு இருப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்? சினிமா உலகினர், தொழிலதிபர்கள், தொலைக்காட்சி சேனல்கள், அரசியல்வாதிகள் அனைவரும் சேர்ந்து, கிரிக்கெட்டை வைத்து மக்களை ஏன் முட்டாள்களாக்குகின்றனர். ஏற்கனவே மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, டில்லி, பஞ்சாப், கோல்கட்டா, ராஜஸ்தான் என்று எட்டு அணிகள் ஐ.பி.எல்.,லில் இருக்க, போதாக்குறைக்கு புதியதாக கொச்சி மற்றும் புனே அணியும் உருவாக்கப்பட்டது. இதில் கொச்சி அணி மட்டும் 1,533 கோடிக்கு, 'ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வோல்ட்' என்ற நிறுவனத்தால் ஏலத்தில் எடுக்கப்பட்டது என்றால், மொத்தம் எத்தனை ஆயிரம் கோடிகள் இந்த கேடு கெட்ட ஆட்டத்தில் புழங்குகிறது என்று யோசித்து பாருங்கள்.

இந்த கொச்சி அணியின் பங்குகளில், தன் காதலி சுனந்தா புஷ்கருக்கு 70 கோடி ரூபாய்க்கான பங்கை, இலவசமாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் சசி தரூர் பெற்றுத் தந்தார் என்பது தான், ஐ.பி.எல்.,லின் தலைவர் லலித் மோடியின் குற்றச் சாட்டு. ஆனால், லலித் மோடி மட்டும் நேர்மையானவரா என்றால், அதுதான் இல்லை. அவர் அமெரிக்காவில் இருந்தபோதிலும், 400 கிராம் கோகைன் போதை பொருள் வைத்திருந்த குற்றத்திற்காகவும், ஆள்கடத்தல் மற்றும் தாக்குதல் நடத்தியதற்காகவும், இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனை அடைந்ததாக சொல்கின்றனர். இப்படிப்பட்ட ஒருவர், மிக உயர்ந்த பதவியில் இருப்பது, அப்பதவிக்கு கேடு என்று சொல்ல முடியாது; இப்படிப்பட்டவர்கள் தான், இன்று உயர் பீடங்களை அலங்கரிக்கின்றனர்.

இது இந்தியாவின் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் மிகவும் பயங்கரமாகவும் இருக்கிறது. டில்லியில் காமன்வெல்த் போட்டிக்காக கட்டப்பட இருக்கும் மெட்ரோ பாலத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி, 400 குடும்பங்கள் துரத்தப்பட்டுள்ளன. அவர்கள், தங்கள் குடிசைகளையும் இழந்து தெருவில் அனாதைகளை போல், இன்று நாய்களை விட மோசமான நிலையில் வாழ்கின்றனர். அந்த 400 குடும்பங்களில், 300 குடும்பங்கள் தமிழர்கள். விரைவில் நடக்கவிருக்கும் காமன் வெல்த் போட்டிக்காக, டில்லியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஆனால், ஏழ்மையை விரட்டுவதாக கூறி, ஆட்சியை பிடிக்கும் அரசியல்வாதிகள், ஏழைகளை விரட்டுவதுதான் தொடர்ந்து நடந்து வரும் அவலம். அதற்கேற்றாற் போல், தெற்கு டில்லியில் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகே, நேரு விளையாட்டு அரங்குக்கு செல்லும் வகையில் மெட்ரோ ரயில் பாலம் கட்டப்படுகிறது. இந்தப் பகுதியில் 35 ஆண்டுகளாக குடிசை போட்டு வசித்து வரும் விளிம்பு நிலை மக்கள், இரவோடு இரவாக துரத்தப்பட்டுள்ளனர்;

இது என்ன நியாயம்? இரண்டுமே விளையாட்டு தான். ஒரு விளையாட்டு, பணக்காரனை மேலும் கொழிக்கவும், செழிக்கவும் வைக்கிறது; இன்னொரு விளையாட்டு, ஏழைகளை, அவர்களுடைய குடிசைகளை விட்டு நடுத்தெருவுக்கு துரத்துகிறது. இங்கே, யாரும் மாற மாட்டார்கள். மறுபடியும் அவர்கள் ஓட்டு கேட்க வருவர். நாமும் மாறாமல், அவர்களிடம் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் வாங்கி, ஓட்டுப் போடுவோம். அரசியல்வாதிகளுக்கு ஒரு கோரிக்கை... யார், யாரோ, ஆயிரம் கோடிகளில் சம்பாதிக்க, உங்களுக்கு ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமர்த்தும் எங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாயா? ஆகவே, இனியாவது எங்களது ஓட்டுக்கான பணத்தை உயர்த்தி, ஒரு ஓட்டுக்கு 50 ஆயிரமாவது கொடுங்கள். ப்ளீஸ்... உங்களுக்கு ஐந்து வருஷம் சான்ஸ். எங்களுக்கோ ஐந்து வருஷத்திற்கு ஒருமுறைதான். இந்த முறை கூட கொஞ்சம் போட்டுப் கொடுங்க....

அப்சல், சிந்தனையாளர்


Saturday, April 10, 2010

Help us

Before spending lot of money in Marriage parties, Birthday parties, Anniversary Parties...
Why do not you think about helping us???


We are  working more than 12 hours per day in dirty world..But we are not getting good food, clean water & good place to sleep..


We need a change..


Educated guys...Do something and Help US


NREGA_jpg_454f.jpg (636×368)

Our Homes









Our Kids Education - Under tree






Drinking Water






Our Village Roads









இருளில் மூழ்கும் இந்திய இதயம்


'இந்தியாவின் ஜீவன் அதன் கிராமத்தில் தான் இருக்கிறது' என்று கூறினார் தேசப்பிதா காந்தியடிகள். சமீபத்தில், மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஒரு பேட்டியில், 'இந்தியா பணக்கார நாடா அல்லது ஏழை நாடா என்ற குழப்பமும், ஆச்சரியமும் சில சமயங்களில் எனக்கு ஏற்படுவதுண்டு.ஆடம்பர செலவு முறைகளைப் பார்க்கும் போது, இந்தியா பணக்கார நாடு என்ற எண்ணம் தோன்றும். அதே சமயம், கிராமங்களின் பக்கம் செல்லும் போது, இந்திய பணக்கார நாடாக இருக்க முடியாது என்று தோன்றும்' என கூறியுள்ளார்.

நம் நாட்டில் மக்களின் உயிர்நாடியான விவசாயம், மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. நகர்ப்புறத்து மக்களுக்காக, கிராமப்புற விவசாயிகளை அரசாங்கமும், இன்னும் பிற அமைப்புகளும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.'இது என் தலைவிதி, இப்படித்தான் நான் இருக்க வேண்டுமென்று இறைவன் படைத்து விட்டான்' என்று, தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்கிறான் விவசாயி.கிராமத்தானின் உழைப்பில் கிடைக்கும் விவசாய பொருட்கள் காய்கறி, பால், இப்படி எத்தனையோ பொருட்களை, நகரத்து மக்கள் அனுபவித்து வருகின்றனர். கிராமங்களில் உற்பத்தியாகும் முதல் தரமான பொருட்களை நகரத்திற்கு அனுப்பிவிட்டு, சொத்தை சொள்ளையான காய்கறிகளையும், பதராய் போன தானியங்களையும் தான் உண்டு வாழ்கிறான் உழவன்.

கிராமப்புறங்களில் இருக்கிற இயற்கை வளங்களை சுரண்டித்தான், நகரத்திலுள்ள நாம், வசதி மிகுந்த வளமான வாழ்வு வாழ்கிறோம். இந்த சுரண்டலில் பல வகை உண்டு. எடுத்துக்காட்டாக, வீராணம் ஏரி நீர், காட்டு மன்னார்குடி மற்றும் சிதம்பரம் தாலுகாவில் உள்ள விவசாய நிலங்களுக்கும், குடிநீர் ஆதாரங்களாக உள்ள ஏரிகளுக்கும் பயன்பட்டது. சென்னைக்கு குடிநீர் கொண்டு வர குழாய் போட்டதோடு சரி... அந்த ஏரியை தூர் வாரவோ, ஆழப்படுத்தவோ இதுவரை எந்த அரசும் முயற்சி செய்தது கிடையாது.

அடுத்து சென்னையிலோ சொகுசு பஸ், குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட பஸ், அல்ட்ரா டீலக்ஸ் பஸ், தாழ்தள பஸ், தொடர் வண்டி பஸ் என்று எத்தனை வகை பஸ்கள். சென்னை புதுப்பேட்டையில் பிரித்து விற்க வேண்டிய பஸ்களும், வெங்காயத்திற்கோ, ஆள்வள்ளி கிழங்கிற்கோ கூட வாங்க தகுதியில்லாத பழைய இரும்பை விட கேவலமான, பஸ்கள் கிராமப் பகுதிகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் கிட்டத்தட்ட நான்கு கோடி மக்கள், மூன்று வேளை உணவு, மாற்று உடை, சொந்த வீடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், அடிப்படை மருத்துவம், கழிப்பிட வசதி முதலியவை இல்லாத ஏழ்மை நிலையில் வாடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மூன்று கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்க தெரியாது. முப்பது லட்சம் குழந்தைகள், பள்ளிக்கூடம் போக வாய்ப்பின்றி ஏழ்மையின் காரணமாக கூலி வேலைக்கு செல்கின்றனர்.கிராமம் இன்றளவும், ஒரு தரித்திரம் பிடித்த நிலையில் தான் உள்ளது. கல்வி வசதி கிடையாது. இன்றும் பள்ளிக்கூட வகுப்பறையில் நடக்க வேண்டிய பாடங்கள், மரத்தடியில் நடத்தப்படுகின்றன.

ஆனால், நகர்ப்புறத்திலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும், ராஜாக்களின் அரண்மனை போன்றும், அமெரிக்க வெள்ளை மாளிகை போன்றும் அமைப்பு கொண்ட கல்விக் கூடங்கள் கணக்கிலடங்காது.

மகாத்மா காந்தி ஒரு தடவை, பீதிகர்வா என்ற கிராமத்திற்கு தனது துணைவியாருடன் போயிருந்தார். அங்கே சில பெண்கள் மிகவும் அழுக்கான உடைகளை உடுத்தியிருந்தனர். அப்பெண்கள் ஏன் தங்கள் ஆடைகளை துவைத்து கட்டுவதில்லை என்று கேட்கும்படி, தனது துணைவியாரிடம் மகாத்மா கூறினார்.அம்மையாருடன் அந்த கிராம பெண்களிடம் பேசினார். அதில், ஒரு பெண், கஸ்தூரிபாயை தனது குடிசைக்குள் அழைத்துச் சென்று, 'வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டியோ, அலமாரியோ இங்கே இருக்கிறதா பாருங்கள். எனக்கு இருப்பது நான் கட்டியிருக்கும் இந்த புடவை ஒன்று தான். இதை எப்படி துவைப்பது? மகாத்மாவிடம் எனக்கு இன்னொரு புடவை கொடுக்கச் சொல்லுங்கள். அப்போது, தினமும் நான் குளித்து துணிகளை சுத்தமாக வைத்திருக்கிறேன்' என்று கூறினாராம்.

இந்த நிலைமை அபூர்வமானதன்று. இந்திய கிராமங்களில் பலவற்றில், இதே போன்ற நிலைமையை காணலாம்.ஆற்று மணலைத் திருடி, அத்தனையும் நகர்புறத்திற்கு கொண்டு வந்து வானளாவிய கட்டடங்களைக் கட்டினோம்; கொள்ளை லாபம் பார்த்தோம். பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு என்ன செய்தோம். ஆற்று மணலைத் திருடியதால், ஆற்றின் ஆழம் கூடியது. நீர் வரத்து காலங்களில் விவசாய பாசன வாய்க்கால்களுக்கு நீர் ஏறாமல், வீணாக ஆற்றில் ஓடி கடலில் கலக்கிறது. தண்ணீர் கிடைக்காத விவசாயிகள், இன்று ஆற்றோரம் ஆழ்துளை கிணறு போட்டு, அதன் மூலம் விவசாயம் நடத்தி வருகின்றனர்.

'வெல்லம் தின்னவன் ஒருத்தன்; விரல் சூப்பியவன் ஒருத்தன்' என்பது போல, மணல் திருடியவன் ஒருவன்; மாட்டிக் கொண்டவன் விவசாயி. அரசாங்கம் இதற்கு கைமாறாக எதுவுமே செய்யவில்லை. விவசாய இடுபொருட்களை வயலுக்கு கொண்டு செல்லவும், விவசாயம் முடித்து விளைபொருட்களை வீட்டுக்கு கொண்டு வரவும், போதிய சாலை இல்லை. அரசாங்கம் இதில் தனி கவனம் எடுத்து, கிராமப்புறச் சாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, சாலை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.மின் வெட்டு என்றால், கிராமத்தான் தலையில் கை வைப்பது தான் அரசாங்கத்தின் முதல் வேலை.

விவசாய பணிகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்தும் நேரத்தை குறைத்து விடுகின்றனர். நகரத்தில் வீடுகளுக்கு இரண்டு மணி நேரம் மின் வெட்டு எனில், கிராமத்தார்களுக்கு ஆறு மணி நேர மின் வெட்டு .கிராமங்களில் 5 கி.மீ., சுற்றளவிற்குள ஒரு மருத்துவமனை இருக்க வேண்டும். இன்னமும் தேள் கடிக்கும், பாம்பு கடிக்கும் கூட பச்சிலை வைத்தியம் தான் செய்து வருகின்றனர்.விவசாய நிலங்களை அரசாங்கங்கள், பல திட்டங்களுக்காக தொடர்ந்து அபகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அந்த விவசாயிகளுக்கு அந்த திட்டங்களால், ஒரு தம் புடி புண்ணியம் இல்லை.

இன்றைக்கு தொழில் மயமாக்கல் திட்டத்தின் மூலம், எத்தனை கிராமங்களில் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன.ஆனால், அந்த பகுதியில் இடங்களை கொடுத்த எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்கின்றனர் என்று கூற முடியுமா? நிலங்களை கொடுத்தவன் தகுதிக்கு ஏற்ற வேலையை அங்கு கொடுக்கலாமே. அவ்வாறு இல்லாத போது, கிராமத்தான் நகரத்தை நோக்கி வராமல் வேறென்ன செய்வான்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியாவில் சிறந்து விளங்கிய இடம் ஐதராபாத்; இதற்கு முக்கிய காரணம் சந்திரபாபு நாயுடு. ஆனாலும், விவசாயத்தையும், விவசாயிகளையும் சரியாகக் கையாளாத காரணத்தால், தேர்தலில் தோற்றுப் போனார். கிராமத்தில் உள்ள ஒரு உழவர், ஒரு தொழிலாளி தனக்கு தேவையானதை மட்டும் உற்பத்தி செய்து கொள்வதோடு நிறுத்திக் கொண்டு விட்டால், நகரத்து மக்களுக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டால், நகரத்து மக்களின் ஒரு நாளைய வாழ்க்கையை மட்டும் நினைத்துப் பாருங்கள்...தமிழகம் என்று மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எல்லா கிராமங்களில் உழன்று கொண்டிருக்கும் பாமர விவசாயிகளையும், பிற தொழில் செய்யும் அப்பாவிகளையும், இருள் உலகிலிருந்து ஒளி உலகுக்கு கொண்டு வர நகரத்து மக்களும், அரசாங்கமும் முயற்சி செய்தால் நல்லது. அவ்வாறு செய்யாவிட்டால், இந்தியா பணக்கார நாடாக இருக்க முடியாது.

- தேவ்.பாண்டே

-சமூக நல விரும்பி